Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி : டில்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மட்டும் 37 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக டில்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 ம் ஆண்டு முதல் 2018 வரை டில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து 46 க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பார்லி.,யில் மத்திய அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக விளங்கும் டில்லி மெட்ரோ ரயில் நிலையம் 250 நிறுத்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் தினமும் 22 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணித்து வருகின்றனர். பாதுகாப்பு காவலர்கள், சிசிடிவி கண்காணிப்பு ஆகியவை இருந்த போதிலும் தற்கொலைகள் தொடர்கின்றன.
இதற்கு அதிகரித்து வரும் மனஅழுத்தமே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதனால், தற்கொலைக்கு எளிதாக இருக்கும் என மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கருதுவதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்கொலைகளை தடுக்க டில்லி மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில், "உடல்நலத்தை விட மனநலம் மிக அவசியம்", "மனநலத்தை பேணி பாதுகாக்கவும்" என்பன உள்ளிட்ட நேர்மறை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதே போன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையிலான வாசகங்களும் ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன.